தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 272 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ‘கலசல்’ வகை மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததைக் கண்டித்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று (செப்.5) கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே கரைநிறுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மூலம் தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபநாட்களாகக் கடலில் பிடிக்கப்பட்டு வரும் கலசல் வகை மீன்களுக்குத் துறைமுகத்தில் போதிய மற்றும் நியாயமான விலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மீன்பிடிக்கச் செல்வதற்கான டீசல் மற்றும் ஆட்களுக்கான செலவைக் கூட ஈடுகட்ட முடியாத சூழல் நிலவுவதால், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து இன்று ஒருநாள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை எனத் திடீர் முடிவெடுத்தனர்.
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 272 விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்திலேயே வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தம் காரணமாக மீன் வியாபாரம் மற்றும் ஏல நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மீன்பிடி துறைமுகமே பரபரப்பின்றி ஆள்நடமாட்டமின்றித் வெறிச்சோடிக் காணப்படுகிறது.


