உப்பளத் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டம் விரிவாக்கப்படுமா? என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
உப்பளத் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளாரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஆகஸ்டு 5) அவர் சில கேள்விகளை எழுப்பினார். “இந்தியாவில் இருக்கிற உப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உள்ள உப்பளத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? கடந்த ஐந்து ஆண்டுகளில் உப்பள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை மாநில மற்றும் ஆண்டு வாரியாக எவ்வளவு?
கல்விச் செலவுகள் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால், மேற்கூறிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியின் அளவை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் ஏதேனும் மதிப்பாய்வு செய்திருக்கிறதா? அப்படியானால், மானியத் தொகையை அதிகரிக்க அல்லது திட்டத்தின் எல்லையை விரிவுபடுத்த ஏதேனும் ஆலோசனைகள் அரசிடம் உள்ளதா? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன? ” என்று கனிமொழி கருணாநிதி எம்பி. கேள்விகள் கேட்டிருந்தார்.
இக்கேள்விகளுக்கு ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த பதிலில், இந்தியாவில் ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய எட்டு மாநிலங்கள் உப்பு உற்பத்தி மாநிலங்களாக இருக்கின்றன.
இந்த மாநிலங்களில் உத்தேசமாக மதிப்பிடப்பட்டபடி குஜராத் மாநிலத்தில் 20 ஆயிரத்து 500 உப்பளத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து 500 உப்பளத் தொழிலாளர்கள் , ராஜஸ்தானில் 15 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆந்திராவில் 5500 உப்பளத் தொழிலாளர்களும் மற்ற மாநிலங்களில் 2 ஆயிரம் அதற்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
Grant of Rewards to the Children of Salt Labourers என்கிற ’உப்பளத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வெகுமதிகள் வழங்கும்’ திட்டத்தின் கீழ், உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக மேற்கண்ட உப்பு உற்பத்தி செய்கிற எட்டு மாநிலங்களிலும் 2021-22 நிதியாண்டில் 2009 பேர், 2022-23 நிதியாண்டில் 1657 பேர், 2023-24 நிதியாண்டில் 1896 பேர், 2024-25 இல் 1573 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
குறிப்பாக 15 ஆயிரத்து 500 உப்பளத் தொழிலாளர்களைப் பெற்றுள்ள தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் 2021-22 இல் 290 பேரும், 2022-23 இல் 373 பேரும், 2023-24 இல் 623 பேரும், 2024-25 நிதியாண்டில் 438 பேரும் என உப்பளத் தொழிலாளர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியின் அளவு பற்றிய மதிப்பாய்வு ஏதும் அரசால் செய்யப்படவில்லை. அதனால், உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவும் திட்டம் விரிவுபடுத்தும் திட்டம் இல்லை” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


