தூத்துக்குடியில், மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது மற்றும் பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்க நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து 350 ஆசிரியர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 350 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்பி வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்: மாணவர்களிடையே போதைப்பொருட்களினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தீமைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் சீரான முறையில் சீருடை அணிவது, தலைமுடியைச் சீராக வைத்திருப்பது உள்ளிட்ட ஒழுக்க விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் தங்கள் சாதிகளைக் குறிக்கும் வகையில் வண்ணமயமான கயிறுகள் அணிவதைத் தவிர்க்க ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடையே மோதல்கள் அல்லது பிற பிரச்சினைகள் எழுந்தால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம். சீருடை அணியாத காவலர்கள் மூலம், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களை நல்வழிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கக் காவல்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் எனத் கேட்டுக்கொண்ட எஸ்பி, போதைப்பொருள் பயன்பாடு குறித்துத் தகவல் தெரிந்தால் 8300014567 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.


