திருச்செந்தூர் கோவிலில் சிறப்புத் தரிசனப் பாதை பக்தர்களின் வசதிக்காக ரூ. 1 கோடியே 82 லட்சம் மதிப்பில் புதிய காத்திருக்கும் கூடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திமுக ஆட்சிக்காலத்தில் 2022-இல் எச்.சி.எல். (HCL) நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ. 100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடங்கின. இதன் கீழ் இலவச பொதுத் தரிசனப் பாதையில் வரும் பக்தர்களுக்குக் காத்திருக்கும் அறை கட்டப்பட்டுள்ளது.
ஆனால், ரூ. 100 சிறப்புத் தரிசனக் கட்டணப் பாதையில் காத்திருக்கும் கூடம் இல்லாததால், கூட்ட நெரிசல் நேரங்களில் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்கும் சூழல் நிலவுகிறது. இதைக் களைந்து பக்தர்கள் நெருக்கடியின்றிப் பகுதிப் பகுதியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, உபயதாரர் பங்களிப்புடன் இப்புதிய காத்திருக்கும் கூடம் கட்டப்பட்டு வருகிறது.
கோயில் ராஜகோபுரம் எதிரே வசந்த மண்டபம் அருகில் இரண்டு பகுதிகளாக மொத்தம் 17 ஆயிரத்து 808 சதுர அடி பரப்பளவில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இக் கட்டுமானப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இக்கூடம் பயன்பாட்டிற்கு வரும் போது பக்தர்கள் வெயில் மற்றும் மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இக் கட்டுமானப் பணிகளைக் கோவில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் ஆ. அருணாசலம், துணை ஆணையர் ந. யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர்.


