மறைந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் பூமணி மறைவுக்குத் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தின் மூத்த படைப்பாளி பூமணி மறைந்த செய்தி மீளாத் துயரத்தையும் வேதனையையும் அளிப்பதாகத் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். பூமணி தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் சமூகத்தின், குறிப்பாகத் தெற்கத்தி மக்களின் துல்லியமான வாழ்வியலையும் அறத்தையும் பெரும் படைப்புகளாக்கிச் சாகித்திய அகாடமி விருது பெற்றவர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், பூமணியின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக அவரது நல்லடக்கத்திற்கு அரசு மரியாதை அறிவித்துள்ள தமிழக அரசுக்குத் தனது நன்றியையும் மரியாதையையும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் இறுதிச் சடங்கு :
உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் காலமான பூமணியின் உடல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் கோவில்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்படவுள்ளன.


