தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று நடத்திய அதிரடிச் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 7 லட்சத்து 49 ஆயிரத்து 900 ரொக்கம் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் பொறியியல் பிரிவில் நுழைந்து அதிரடிச் சோதனையைத் தொடங்கினர். இந்தச் சோதனையின் போது, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் திலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரின் அறைகளில் போலீசார் தீவிரமாகப் பரிசோதனை மேற்கொண்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், உரிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூபாய் 7,49,900 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என்ற நிலையில், தற்போதைய பணப் பறிமுதல் சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பொறியாளர்கள் திலகம் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


