தூத்துக்குடி ரயில் நிலையம் 1-ஆம் கேட் முன்பு பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி, சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் இசக்கி செல்வ லட்சுமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மாநகராட்சி ஆணையருக்குப் அனுப்பியுள்ள மனுவில், “தூத்துக்குடி ரயில் நிலையம் 1-ஆம் கேட் முன்பு மாநகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகப் பல மாதங்களுக்கு முன்பு பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னரும் இன்று வரை இப்பள்ளம் மூடப்படாமல் உள்ளதால், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பகுதியில் 1 மற்றும் 2-ஆம் ரயில்வே கேட்டுகள் மணிக்கு இருமுறை மூடப்படுவதால், பொதுமக்கள் பஜார் மற்றும் முனிசிபல் பகுதிகளுக்குச் செல்ல புதிய பேருந்து நிலைய மேம்பாலம் அல்லது கடற்கரைச் சாலை வழியாகப் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த இரண்டு கேட் பகுதிகளையும் சுற்றி ஏராளமான ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
பள்ளி மாணவ, மாணவிகளின் பயண சிரமத்தையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, ரயில்வே 1-ஆம் கேட் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தை உடனடியாகச் சீர் செய்து, சாலையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


