தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைபடகுகள் / நாட்டுப்படகுகள் வருடாந்திர களஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு கடல் சார் மீன்பிடித்தலை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தையும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணியாளர்களைக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டிற்கு மீன்பிடித்தடைக்காலம் அமலில் உள்ள காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் வருடாந்திர களஆய்வு 26.05.2026 அன்று மேற்கொள்ளப்பட உள்ளது என அறிவிப்பு செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் வருடாந்திர களஆய்வு 05.06.2026 அன்று மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் அறிவிப்பு செய்யப்படுகிறது.
மேலும் நேரடி களஆய்வின் போது காண்பிக்கப்படாத மீன்பிடி விசைப்படகுகள் / நாட்டுப்படகுகளுக்கு அரசின் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி அப்படகுகளின் பதிவு சான்றினை உரிய விசாரணைக்கு பின் இரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கள ஆய்வு நடைபெறும் நாளன்று காலை 6.00 மணிக்கு அனைத்து மீன்பிடி கலன்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்களையும் அறிவுறுத்தப்படுகிறது என ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


