திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொடை விழாவை முன்னிட்டு கடந்த 3-ஆம் தேதி இரவு முத்தாரம்மனுக்கு மாக்காப்பு அலங்காரமும், அதற்கு அடுத்த நாள் இரவு சந்தன லேபன அலங்காரமும் சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
பகல் 12 மணியளவில் முத்தாரம்மன் கோவிலில் இருந்து உச்சினிமாகாளியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் கோவில்களுக்குத் தட்டு பிரசாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வெயிலுகந்தம்மன் கோவிலில் இருந்து தாடாத்தி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக, முத்தாரம்மன் வெள்ளி அங்கி சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவினை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பல்வேறு தெய்வங்களின் வேடங்களை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர். பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் அம்மனை வழிபட்டனர். அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் மற்றும் சைவ வேளாளர் இளைஞர் பேரவையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


