தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மெயின் ரோட்டில், பல ஆண்டுகளாகச் சேதமடைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயைச் சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால், பொதுமக்களும் மாணவ-மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பெருமாள்புரம் மெயின் ரோட்டில் செங்கல் ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கியது. இதில் கால்வாயின் பக்கவாட்டுச் சுவர்கள் முற்றிலும் இடிந்து சேதமடைந்தன. விபத்து நடந்த சமயத்தில், சம்பந்தப்பட்ட லாரி நிறுவனத்தின் மூலமாகவே கால்வாய் சீரமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதிகாரிகள் அளித்த வாக்குறுதி அளிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும், இதுவரை எவ்வித சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பள்ளிகள்) மற்றும் கல்லூரி எனப் பல கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். கால்வாய் சேதமடைந்துள்ளதால், குறுகலான சாலையில் மக்கள் நடமாடப் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாகப் பள்ளி நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், மாணவர்கள் கால்வாய்க்குள் விழுந்து காயம் அடையும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சியின் உதவி மையத்திற்கு பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கால் முதியவர்களும், குழந்தைகளும் சாலையில் நடக்கவே அஞ்சுகின்றனர். எனவே, மாநகராட்சி மேயர் இந்தப் பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் கால்வாயைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


