தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி பற்றிய ஓருவார கால உள்வளாகப் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது, நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் நடத்தும் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி” என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியானது 28.08.2025 முதல் 04.09.2025 வரை நடைபெற்றது.
இதன் நிறைவு விழாவானது இன்று தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 23 மீனவர்கள் கலந்து கொண்டனர்.
மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் த. ரவிக்குமார் வரவேற்புரையாற்றினார். மீன்வளக்கல்லூரி முதல்வர் (பொ) சா. ஆதித்தன், தலைமையேற்று பேசுகையில், “ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் இந்தப் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பங்கு குறித்து அவர் பேசினார். மேலும், பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த அனைத்து மீனவர்களுக்கு, நிறைவு விழாவின் போது படகு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழகம் முதல்வர் கேப்டன் ஜே. மோகன் குமார், திருநெல்வேலி மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் ப. மோகன்ராஜ், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் ஜே. ஏஞ்சல் விஜய நிர்மலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். உதவிப் பொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரபாகர், நன்றியுரை ஆற்றினார். முதுநிலை ஆராய்ச்சியாளர் சூ. எமிமா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துறையின் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.


