திருச்செந்தூர் சிவன், வெயிலுகந்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவில்களான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் என்ற சிவன் கோவில், வெயிலுகந்தம்மன் கோவில், அமிர்தகுண விநாயகர், சொர்ணவர்ண சாஸ்தா கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இதையொட்டி சிவன், வெயிலுகந்தம்மன் கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
சிவன் கோவிலில் நேற்று அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி, தீபாராதனை யாத்ராதானம் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவில் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிகாலை 5.45 மணிக்கு விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி மற்றும் சுவாமி நடராஜர் புறப்பாடு நடந்தது.
அதேபோல் வெயிலுகந்தம்மன் கோவிலில் காலை 6.18 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவில், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, கோவில் தக்கார் அருள்முருகன், உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர்கள் ரோகிணி, அஜித், விவேக், சுபிதா, விஜயலட்சுமி, தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.


