மகேந்திர சிங் தோனி , சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.மேலும் அவர் காலத்திலான ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.
2004ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதைப் பெற்றார். இவர் இந்த விருதை இருமுறை வென்ற முதல் வீரர் ஆவார்.மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கான நான்காவது மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்[7]. 2009, 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான உலகப் பதினொருவர் அணியின் தலைவராக இவர் தேர்வானார். மேலும் இந்த அணியில் எட்டு முறை இடம் பிடித்தார். அதில் ஐந்து முறை தலைவராக இருந்தார். நவம்பர் 2011இல் இந்திய ரானுவம் தோனிக்கு கௌரவ துணைநிலை கர்னல் பதவி அளித்தது. இவர் கபில்தேவிற்குப் பிறகு இந்த மரியாதையைப் பெறும் இரண்டாவது வீரர் ஆவார்.
2012 ஆம் ஆண்டில் ஸ்போர்ட்ஸ் புரோ ஊடகத்தின் அதிக வியாபாரமாகக்கூடிய தடகள வீரர்கள் வரிசையில் இவருக்கு பதினாறாவது இடம் கிடைத்தது.இந்தியன் சூப்பர் லீக்கின் சென்னையின் எப் சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். 2015 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் இவருக்கு 23 ஆம் இடம்கிடைத்தது (31 மில்லியன் அமெரிக்க டாலர்) . எம். எஸ். தோனி (திரைப்படம்) இவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டு வீரர் விருது (இந்த விருதை இரண்டு முறை பெற்ற முதலாவது இந்திய விளையாட்டு வீரர்), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமகனுக்கான மிக உயரிய நான்காவது கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மூன்றாவது விருதான பத்ம பூசண் உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நவம்பர் வரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தோனி அதிக மதிப்பெண் பெற்ற மட்டையாளராக இருக்கிறார். 2009ஆம் ஆண்டில் விசுடனின் முதலாவது கனவு தேர்வு XI அணிக்கான தலைவராகவும் இடம்பெற்றிருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் துடுப்பாட்ட வீரர்களில் மகேந்திர சிங் தோனி முதலாவதாக இருந்தார். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையை வென்றது. அதன் பின்னர் இதுவரை இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லை.


