தூத்துக்குடியில் ‘மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலைசீர் செய்தல் பயிற்சியின் துவக்கவிழா நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதாமீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை ‘மீனவப் பெண்களுக்கான செவுள் வலைவடிவமைத்தல், பின்னல் மற்றும் வலைசீர் செய்தல் பற்றிய பயிற்சி என்ற ஒருவாரகால உள்வளாகப் பயிற்சியை 11.10.2023 முதல் 18.10.2023 வரை நடத்தி வருகிறது.
இதன் துவக்கவிழாவானது 11.10.2023 அன்றுகாலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சிமையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பழையகாயல் கிராம 30 மீனவப் பெண்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இணை இயக்குநர் இரா. அமல் சேவியர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர்தம் சிறப்புரையில் மீனவப் பெண்களுக்காகக் கொடுக்கப்படும் இப்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்களையும் எடுத்துரைத்தார்.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அகிலன் தலைமை வகித்தார். அவர்தம் தலைமையுரையில் மீனவப் பெண்களுக்கான செவுள் வலைவடிவமைத்தல், பின்னல் மற்றும் சீர்செய்தல் பயிற்சியானது இக்கல்லூரியின் மூலம் வழங்கப்படுவது பாராட்டுதற்குரியது எனக் கூறினார்.
மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் பேராசிரியர்மற்றும் தலைவர் நீ.நீதிச்செல்வன் தனது பயிற்சி விளக்கவுரையில் மீன்பிடி வளர்ச்சியில் பெண்களின் பங்கு இன்றியமையாது என்றும் மேலும் இப்பயிற்சியானது மீனவப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் எனவும் எடுத்துரைத்தார். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் த. இரவிக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். ஏஞ்சல் விஜய நிர்மலா, உதவி இயக்குநர், மாவட்டத் திறன் பயிற்சிஅலுவலகம், தூத்துக்குடி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஒருவார கால உள்வளாகப் பயிற்சியின் போது செவுள்வலைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு முடிச்சுக்ள் வலைவுகள், கயிறு இணைத்தல் முறை,வலைகளை வடிவமைத்தல், மடங்குபின்னுதல், வலைவெட்டி சீர்செய்யும் முறைகள், வலைகளை இணைக்கும் முறைகள் மற்றும் மாதிரி செவுள் வலைவடிவமைத்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படவிருக்கிறது.
மீன்பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரகாகர் நன்றியுரை ஆற்றினார். முதநிலை ஆராய்ச்சியாளர்கள் சே. அர்ச்சனா, ஜே. அமலா சஜீவா, செல்வி த. சுந்தரேஸ்வரி, இ. தினேஸ் குமார், மு. வீரமணி மற்றும் செல்வி சூ. ஏமிமா ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.


