ஆறுமுகநேரி அருகே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மின் வயரில் சிக்கியதால் ரயில்கள் தாமதமானது. பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி – குரும்பூர் பகுதியில் இடையில் ரயில் வழித்தட மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7.15 மணியளவில் ஆறுமுகநேரி ரயில் நிலையம் அருகில் வந்தபோது தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின் வயரில் ரயில் இன்ஜின் சிக்கியது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நெல்லையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த பயணிகள் ரயில் நாசரேத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும், திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஆறுமுகநேரியில் நிறுத்தப்பட்டது. மின்வயர் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மின்மயமாக்கல் பணி முடிவடையாத காரணத்தால் வயரில் மின் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் விபத்து எதுவும் இன்றி பயணிகள் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


