விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு இன்றையதினம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களான குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, வேடநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குளத்தூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி, குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியினையும், மேலும் குளத்தூர் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, வைப்பார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இ.வேலாயுதபுரம் து.ந.தி.அ.த.தொடக்கப்பள்ளி, சூரங்குடி தனிஸ்லாஸ் ஆரம்பப்பள்ளி மற்றும் அரியநாயகிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் சென்று பார்வையிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் வசதி உள்ளிட்ட வசதிகளை களஆய்வு மேற்கொண்டார்.
மேலும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடமான விளாத்திகுளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வில், தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா (விளாத்திகுளம்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஐய்யனார் (ஓட்டப்பிடாரம்), கண்ணன் (விளாத்திகுளம்) மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


