நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கும் அதிகபட்ச தண்டனையான ‘மரண தண்டனை’ வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் மீது குற்றம் சுமத்தியது. கடந்த மாதம் 23-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன், இவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரங்கள் குறித்த வாதத்திற்காக இன்று (ஏப்ரல் 2) மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் “குற்றவாளிகள் இருவரும் ஆயுதங்களால் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.”சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதால், இது ‘அரிதினும் அரிதான’ வழக்கு (Rarest of rare case) என்ற அடிப்படையில் 9 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என வாதிட்டனர்
தண்டனையைக் குறைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் “கொலை செய்யும் நோக்கில் தந்தை, மகனைத் தாக்கவில்லை; பென்னிக்ஸ் தகராறு செய்ததாலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டோம் என்பதையும், குடும்பப் பின்னணியையும் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை (தண்டனை விவரம்) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.


