தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு ஆறு நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்ட ஒழுங்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள காவல்துறையினருக்கு ஆறு நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு இன்று துவங்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு இன்று (02.02.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற புத்தாக்க பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் துவக்கி வைத்தார்.
இப்பயிற்சியில் காவல்துறையினரின் திறனை மேம்படுத்தும் வகையில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள், காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையயேயான அனுகு முறை, புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல், புகார் சம்பந்தமாக விசாரணை செய்வது, இரவு ரோந்து மற்றும் பகல் ரோந்தில் காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், முதல் தகவல் அறிக்கையில் காவலர்களின் பங்கு, சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல், போக்சோ சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான குற்றங்கள், CCTNS செயல்பாடு போன்றவற்றில் காவல்துறையினரின் பங்கு மற்றும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு புத்தாக்க பயிற்சி நடைபெற உள்ளது. இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அனுபவம் வாய்ந்த உயர் காவல் அதிகாரிகளால் நடத்தப்பட உள்ளது.
மேற்படி இன்று துவங்கி 6 நாட்கள் நடைபெறும் புத்தாக்க பயிற்சி வகுப்பில் 62 காவல்துறையினர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 6 நாட்கள் இந்த புத்தாக்கி பயிற்சி தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உடனிருந்தார்.


