
பெ. சு. மணி நவம்பர் 2, 1933 – ஏப்ரல் 27, 2021 தமிழக எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை ஆய்வுசெய்து எழுதிய முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர். அஞ்சல்துறை ஊழியராக பணியாற்றினார். சென்னையில் வாழ்ந்தார். மயிலை ராமகிருஷ்ண மடம், பிரம்மஞான சங்கம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார். எண்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு, வ.வே.சு.அய்யரின் கம்பராமாயணக் கட்டுரைகள் போன்ற பலநூல்களை தொகுத்து பதிப்பித்திருக்கிறார். ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். பண்பாட்டு ஆய்வாளரும் மொழிபெயர்ப்பாளருமான வெ.சாமிநாத சர்மாவின் மாணவர்.
பெ. சு. மணி வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலைக்கு அருகில் கீழ்பெண்ணாத்தூர் எனும் ஊரில் 1933 நவம்பர் 2 இல் பிராமணக் குடும்பம் ஒன்றில் சுந்தரேசன், சேதுலெட்சுமி ஆகியோருக்குப் பிறந்தார். 1950 இல் சென்னையில் மூன்றாண்டுப் படிப்பை முடித்து அஞ்சல்துறையில் பணியில் சேர்ந்தார். ம.பொ.சி.யின் எழுத்துகளையும், பேச்சுக்களையும் கேட்கத் தொடங்கிய பெ. சு. மணி தமிழரசுக் கழகத்தின் மேற்கு மாம்பலச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். “இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்பதே இவரது முதலாவது நூலாகும். இது 1973 இல் வெளிவந்தது. 80-இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய “நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழில் – ஓர் ஆய்வு” எனும் நூல் சிறப்பாகப் பாராட்டப்பட்டது. இலங்கையின் மட்டக்களப்புக்குச் சென்று, பலநாள் தங்கி சுவாமி விபுலாநந்தரின் வாழ்வையும் பணிகளையும் வெளிப்படுத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தின் விவசாய மக்கள் பிரச்சினை குறித்து விரிவான ஆய்வு அறிக்கையை முதன்முதலில் வெளியிட்டவர்.
சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த பெ. சு. மணி 2021 ஏப்ரல் 27 இல் உடல்நலக் குறைவால் தில்லியில் தனது 87-வது அகவையில் காலமானார்.