மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேர்வதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம்) 12.11.2017 அன்று சட்டபேரவை அறிவிப்பின்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற 01.08.2025 அன்று 21 வயது பூர்த்தி அடைந்த பட்டதாரி இளைஞர்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வார வேலைநாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வடக்கு கடற்கரை சாலை, திரேஸ்புரம், தூத்துக்குடி அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25.11.2025- மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தூத்துக்குடி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


