திருச்செந்தூர் தெப்பக்குளம் மண்டபத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமாகின.திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம், நாகர்கோவில் சாலையில் ஆவுடையார்குளம் அருகில் உள்ளது. தற்போது, தொடர் மழை மற்றும் நீர் வரத்தால் தெப்பக்குளம் நிரம்பியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் மண்டபத்தில் மின்கசிவு ஏற்பட்டு நுழைவுப் பகுதியில் இருந்த மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமாகின.
அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். சம்பவம் அறிந்து, கோயில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, பணியாளர் ஜெகன், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், போலீசார் வந்தனர். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


