தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களைத் திரும்பப் பெறும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் வரவேற்பறைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குக் கொண்டு வரப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கையேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் கொண்டு வரப்படும். இவற்றை மண்டல அலுவலர்களிடமிருந்து வரவேற்பறையில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்குப் பதிவுக்குப் பின்னர் இயந்திரங்களைச் சரியான முறையில் கையாளுதல் மற்றும் சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தல் குறித்து இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் விளக்கிச் சொல்லப்பட்டது. இப்பணிகளை எவ்விதத் தாமதமுமின்றி மேற்கொள்ள ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்), மி.பிரபு (தூத்துக்குடி), ரா.கௌதம் (திருச்செந்தூர்), செந்தில்வேல் முருகன் (திருவைகுண்டம்), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), ஹிமான்ஷு மங்கள் (கோவில்பட்டி), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


