தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி சார்பில் “நன்னீர் மீன்வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள்” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக “நன்னீர் மீன்வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள்” குறித்த வெளிவளாக விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, டிவிஎஸ் சினிவாசன் சேவை மையத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா, இரட்டை திருப்பதியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மொத்தம் 27 விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நன்னீர் மீன்வளர்ப்பில் உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை நீர்த்தரமேலாண்மை, வர்த்தகம் சந்தைப்படுத்துதல் மற்றும் பொருளாதாரம் குறித்த தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்பட்டது. தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப.அகிலன் தலைமையுரையில் நன்னீர் மீன் வளர்ப்பில் புதிதாக தொழில் துவங்கி நன்முறையில் லாபம் ஈட்டி பயன்பெற்று மீன்வளத்தைப் பெறுக்குமாறு பயிற்சியாளர்களை ஊக்குவித்தார்.
இந்நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) கோ.அருள் ஒளி ஒருங்கிணைத்தார். உதவிப் பேராசிரியர்கள் பூ.மணிகண்டன், வெ.கோமதி மற்றும் ம. கீதா ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் மீன்வளர்ப்புத் துறையின் சார்பாக சக்தி விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக மீன்வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மீன்வளர்ப்புத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சா.ஆதித்தன் பல்கலைக்கழக விவரங்கள், 2025-26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள் மற்றும் மீன்வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார்.


