ஓட்டப்பிடாரம் அருகே தோட்டத்தில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்திய கடந்தை விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, சில்லாங்குளம் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் எலுமிச்சை மரத்தில் கடந்தை வண்டுகள் கூடு கட்டி அச்சுறுத்தும் விதமாக இருந்தது. தோட்டத்து உரிமையாளர் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு – மீட்புப் பணிநிலையத்திற்கு தொடர்பு கொண்டு கடந்தை வண்டுகளை அகற்றித் தருமாறு கோரினார்.
நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு ரெஜி மற்றும் தீயணைப்பு வீரர்கள் பெரியசாமி, வெற்றிவேல் முருகன், சுந்தர மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பந்தம் மூலம் கடந்தை விஷ வண்டுகளை அழித்து கூட்டையும் அகற்றினர். இதனால் தோட்டத்து உரிமையாளரும், சுற்றி இருந்த பொது மக்களும் நிம்மதி அடைந்தனர்.
இந்நிகழ்வின் போது தோட்டத்து உரிமையாளரின் 2 வயது பேரக்குழந்தை சிறிய நேரத்தில் பாசத்துடன் பழகிய தீயணைப்பு வீரர்கள் சேவை முடிந்து செல்கையில் கண்ணீர் விட்டு அழுதது அப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


