
குரங்கணி முத்துமாலையம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கால்நாட்டு விழா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் சிகர நிகழ்ச்சியான கொடை விழா ஜுலை 12ம் தேதி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரச்சித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரச்சித்தி பெற்றதாகும்.
இராமபிரான் இராவனனை போர்புரிந்து வெல்ல காரணமான இடமாக குரங்கணி கூறப்படுகிறது. தன் வானரச்சேனையை அணிவகுத்து நின்ற இடமாக அதாவது குரங்கு அணி வகுத்து நின்ற இடம் குரங்கணி ஆகும்.
இராவணன் சீதா தேவியை விண்ணில் கவர்ந்த சென்றான். அப்போது இராமபிரானுக்கு அடையாளம் காட்டவே தம் கழுத்தில் கிடந்த முத்துமாலையை எடுத்து வீசினாள் அன்னை. புஷ்பக விமானத்திலிருந்து வீசிய முத்துமாலை விழுந்த இடம் குரங்கணி. காசியில் சக்தியின் காதணி விழுந்த இடத்தில் விசாலாட்சி தோன்றினாள். அதுபோலவே தாமிரபரணிக்கரையில் விழுந்த முத்துமாலை ஜோதிப்பிழம்பாய் காட்சியளித்தது. அந்த மாலை அம்மன் ரூபத்தில் இங்கே இருந்து அருள் வழங்க ஆரம்பித்தாள். முத்துமாலையில் வந்த அம்மன் முத்துமாலை அம்மன் என்று அழைக்கப்பட்டார்.
இந்த கோவிலில் ஆனித்திருவிழா வருடம் தோறும் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டின் திருவிழாவிற்கான கால்நாட்டு விழா இன்று மதியம் நடந்தது. இதற்காக அம்மன் கோவில் அதிகாலை நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு கால்நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
இந்த கோவிலில் கொடைவிழா மற்றும் சிகர நிகழ்ச்சி ஜீலை மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. அன்று இந்த முத்துமாலையம்மனை வணங்க திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.
இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களாளில் காலை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருவிழா நாளன்று பக்தர்கள் மாவிளக்கு வைத்தல், மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கை, கால்கள் ஆகியவைகளை நேர்ச்சையாக செலுத்தினர்.
அன்று இரவு கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல், நள்ளிவு 12 மணிக்கு வானவேடிக்கை அதனை தொடர்ந்து 1 மணிக்கு நாராயணர் பாமா ருக்மணியுடன் திருவீதி உலா வருதல் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.