தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026 அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து திருமண மண்டபங்கள், அச்சகங்கள், மதுபானக் கடைகள் மற்றும் அடகுக் கடை உரிமையாளர்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் கடந்த 15.03.2026 அன்று தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றித் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட, கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்குப் பின்வரும் கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது:
அச்சக உரிமையாளர்கள்: தேர்தல் தொடர்பான பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அச்சிடும்போது, அதில் அச்சகத்தின் பெயர், முகவரி மற்றும் பிரதிகளின் எண்ணிக்கை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
திருமண மண்டபங்கள்: மண்டபங்களில் சமூகச் சமையலறைகள் (Community Kitchens) அமைப்பது மற்றும் அரசியல் கூட்டங்கள் நடத்துவது குறித்த கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
அடகுக் கடைகள்: சந்தேகத்திற்குரிய வகையில் நகை அல்லது பொருட்கள் அடகு வைக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
மதுபானக் கடைகள்: தேர்தல் நேரத்தில் மதுபான விற்பனை மற்றும் இருப்பு குறித்த தேர்தல் ஆணையத்தின் நேரக் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறக்கூடாது. இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்), மி. பிரபு (தூத்துக்குடி), ரா. கௌதம் (திருச்செந்தூர்), செந்தில்வேல் முருகன் (திருவைகுண்டம்), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), ஹிமான்ஷீ மங்கள் (கோவில்பட்டி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கல்யாணக்குமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


