தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் தூண்டில் வளைவை உடனடியாக அமைக்க வலியுறுத்தி வருகிற 23ஆம் தேதி நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுதொடர்பாக நாட்டுப்படகு மீன்பிடிச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 1,200 நாட்டுப்படகுகளில் 10,000-க்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றத்தால் நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்ததால் திரேஸ்புரம் கடற்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, 2006ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை சார்பில், மீன்பிடித் துறைமுகத்தில் ஒரு பகுதி 1,050 மீட்டர் தொலைவு வரை, மற்றொரு பகுதி 538 மீட்டர் தொலைவு வரை என இரு தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. ஆனால், 538 மீட்டருக்குப் பதிலாக 250 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. உரிய நிதி இல்லையென மீதிப் பணி கிடப்பில் போடப்பட்டது.
முழுமையாக, முறையாக தூண்டில் வளைவு அமைக்கப்படாததால் இயற்கை சீற்றத்தின்போதும், காற்று வேகமாக வீசும்போதும் நாட்டுப்படகுகள் மோதி சேதமடைவது தொடர்கிறது. இதனால், ஆண்டுக்கு ஒரு படகுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், திரேஸ்புரம் அனைத்து நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, தமிழக அரசு, மீன்வளத் துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு,விடுபட்ட 285 மீட்டர் தொலைவு தூண்டில் வளைவை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, இம்மாதம் 23ஆம் தேதி 1,200 நாட்டுப்படகு மீனவர்களும் ஒருநாள் வேலைநிறுத்தம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


