
சென்னல்பட்டியில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்தியா முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் செப்டம்பர் 2ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன் அடிப்படையில் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் காசநோய் டாக்டர் சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின்பேரில் தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் இன்று சென்னல்பட்டி கிராமத்தில் நடந்தது. இந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் பிலிப் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் சுகாதார குழுவினர் சென்னல்பட்டி கிராமத்தில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்தனர். மேலும் இந்த குழுவினர் காசநோய் பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், காசநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சுகாதார கல்வி மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமை துவக்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி பேசுகையில், எச்ஐவி பாதிப்பு உள்ளோர், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், கேன்சர் நோயாளிகள், புகையிலை பயன்படுத்துவோர் ஆகியோர்களுக்கு காசநோய் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. இவர்களை கண்டறிந்து காசநோய் பரிசோதனை செய்ய கருங்குளம் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செப்டம்பர் 2 முதல் நவம்பர் 1வரை சிறப்பு கவனம் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதனை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த முகாமில் கிராம சுகாதார செவிலியர் ஆனந்தி, சுகாதார பார்வையாளர் முத்துலெட்சுமி, ஆய்வக நுட்பநர் ஜெமிலா, அங்கன்வாடி பணியாளர் செய்யது சித்தி பானு, அங்கன்வாடி உதவியாளர் சுப்பு லெட்சுமி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.