
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 13ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நவத்திருப்பதி ஸ்தலங்கள் மிகவும் பிரச்சித்தி பெற்றவை. நவ திருப்பதிகளில் முதலாவது திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக காலை கொடி ஊர்வலமாக வந்தது. காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. இதைத் தொடர்ந்து தேர்கால் நடுதல் நடந்தது. அதன்பின்னர் 11 மணிக்கு தங்க மசகிரியில் கண்ணாடி மண்டபத்தில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி, மாலை 6 மணிக்கு தங்க தோளுக்கினியானில் சுவாமி கள்ளபிரான் வீதி புறப்பாடு நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை தங்க தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, காலை 11 மணிக்கு தங்க மசகிரியில் கண்ணாடி மண்டபத்தில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி, மாலை பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கள்ளபிரான் வீதியுலா நடக்கிறது. வரும் 9 ம் தேதி 5ம் திருவிழாவில் காலை 9.30 மணிக்கு சுவாமி கள்ளபிரான், காய்சினவேந்தபெருமாள், எம்இடர் கடிவான், பொலிந்து நின்றபிரான் ஆதிநாதபெருமாள் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு 4 கருட வாகனத்தில் சுவாமி கள்ளபிரான், பொலிந்து நின்றபிரான், காய்சினவேந்தபெருமாள், ஸ்ரீவிஜயாசனப் பெருமாள் குடவறை பெருவாயில் எதிர்சேவை, வீதி புறப்பாடு நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதையொட்டி சுவாமி கள்ளபிரான் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்கு தேரில் எழுந்தருளலும், 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், விழா குழுவினரும் செய்து வருகின்றனர்.