சேர்வலாறு தண்ணீர் திறப்பால் கருங்குளம் பகுதியில் வீணாகும் தண்ணீர். பயிர்கள் பெரும் பாதிப்பு அடைந்தது.
கருங்குளம் பகுதியில் தாமிரபரணி நதியில் இருந்து மருதூர் அணைக்கட்டு மூலமாக பிசான பருவம் நடந்து முடிந்துள்ளது. முத்தாலங்குறிச்சி, குட்டைகால், கொள்ளீர்குளம், நாட்டார்குளம், செய்துங்கநல்லூர், தூதுகுழி, கருங்குளம், பெட்டைகுளம், கிருஷ்ணன் குளம், வீரளபேரிகுளம், கால்வாய்குளம், வெள்ளூர்குளம், தென்கரைகுளம், நொச்சிகுளம், முதலைமொழிகுளம், தேமாங்குளம், வெள்ளரிக்காய் ஊரணி குளம், புதுக்குளம் உள்பட குளங்களின் மூலம் நெல் பயிரிட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பில் உள்ள பயிர்கள் நன்கு விளைந்து உள்ளது. விவசாயிகள் எதிர் பார்த்ததை விட நல்ல மகசூல் அடையும்நிலை உள்ளது. அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் இறங்கி அறுவடை செய்ய விவசாயிகள் தயாரான போது கடந்த 13ந்தேதி காலை 10 மணியளிவில் திடீர் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மழையால் நெல் பயிர்கள் சாய்ந்து விட்டன. இனி இரண்டு நாளுக்குள் அறுவடை செய்யாவிடில் பயிர் முளைத்து பயனற்று போய்விடும். என நினைத்தனர். ஆனாலும் ஒரளவு மழை அளவு குறைந்து விட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக சேர்வலாறு அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு விட்டது. இதனால் மருதூர் மேலணையில் மிக அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் மழைக்காலத்தில் ஊருக்குள் புகுவது போல விட்டிலாபுரம், செய்துங்கநல்லூர், அண்ணாநகர், கலைஞர்நகர் உள்பட பல பகுதியில் குடியிருப்புக்குள் நுழைந்து விட்டது. அதோடு மட்டுமல்லாமல் உடைந்த மடைகளால் தண்ணீர் வயலுக்குள் புகுந்து விட்டது. இதனால் அறுவடை செய்ய காத்திருந்த பயிர்கள் மேலும் பாதிப்படைந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஒரே நேரத்தில் அறுவடைக்கு வந்த காரணத்தினால் அறுவடை இயந்திர தட்டுபாடு இருந்தது. பல இடங்களிலும் இருந்தும் புரோக்கர்கள் மூலம் இயந்திரங்கள் ஏற்பாடு செய்த நேரத்தில் கடந்த 13 ந்தேதி மழை பெய்துவிட்டது. இதனால் பயிர்கள் மடிந்து விட்டன. தற்போது சேர்வலாறு தண்ணீரை சம்பந்தமில்லாமல் திறந்து வயல்வெளிகளை வீணடித்து விட்டார்கள். வீணாக செல்லும் இந்த தண்ணீரை சேர்த்து வைத்தால் குடிதண்ணீருக்கு உதவும் அல்லது அறுவடை காலம் முடியும் வரை காத்திருந்து தண்ணீரை மாரமத்து பணிக்கு விட்டிருந்தால் பழந்தொழி என்னும் முன்கார் சாகுபடி செய்ய உதவியாக இருக்கும் ஆனால் தற்போது யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் போய் விட்டது. என வேதனையுடன் கூறினார்.


