தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த 10-ம் தேதி நடந்தது. விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்நிலையில், கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணி நெல்லை அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் நிர்வாக அலுவலர் அஜித், அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், அறங்காவலர்கள் சேர்மதங்கம், மோகனா, முன்னாள் ஊர் கமிட்டி தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கோபிநாத், உதவி மேலாளர் பிரசாத் மற்றும் வங்கி ஊழியர்கள், மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் ரூ.14 லட்சத்து 21 ஆயிரத்து 758-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 37 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தன.


